நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது


நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது
x

நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

லக்னோ,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (20ம் தேதி) 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மராட்டியம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். காங்கிரஸ், பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

5ம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் 6ம் கட்ட தேர்தல் 25ம் தேதியும் 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


Next Story