திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் 17-ம் தேதி தொடங்குகிறது


Tiruchanoor Padmavati temple Teppotsavam
x
தினத்தந்தி 7 Jun 2024 6:45 AM GMT (Updated: 7 Jun 2024 12:23 PM GMT)

20-ம் தேதி இரவு கஜ வாகன சேவையும், 21-ம் தேதி இரவு கருட வாகன சேவையும் நடைபெறுகிறது.

திருப்பதி:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வருடாந்திர தெப்ப உற்சவ விழா நடக்கிறது. விழா நாட்களில் உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

முதல் நாளில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரண்டாம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கடைசி மூன்று நாட்கள் (19, 20 மற்றும் 21-ம் தேதி) பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

கடைசி மூன்று நாட்களில் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 20-ம் தேதி இரவு கஜ வாகன சேவையும், 21-ம் தேதி இரவு கருட வாகன சேவையும் நடைபெறுகிறது. அதாவது, இந்த நாட்களில் தாயார் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தபின், சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி கோவிலுக்கு செல்கிறார்.

வருடாந்திர தெப்ப உற்சவத்தையொட்டி 17-ம் தேதியில் இருந்து 21-ந்தேதி வரை கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, லட்சுமி பூஜை, புஷ்பாஞ்சலி சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Next Story