ஒலிம்பிக்: இந்தியா முதல் தங்கப்பதக்கம் வென்றது எப்போது தெரியுமா..?


ஒலிம்பிக்: இந்தியா முதல் தங்கப்பதக்கம் வென்றது எப்போது தெரியுமா..?
x

கோப்புப்படம்

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

இதனையொட்டி இந்தியா ஒலிம்பிக் தொடரில் முதல் தங்க பதக்கம் வென்றது குறித்து இங்கு காண்போம்....!

9-வது ஒலிம்பிக் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் 1928-ம் ஆண்டில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடந்தது. இந்த ஒலிம்பிக்கில் முதல் முறையாக தொடக்க விழா நடைபெற்ற ஸ்டேடியத்தில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டம் நடைபெறவில்லை.

இந்திய அணிக்கு முதல் தங்க பதக்கம்: இந்திய அணி தங்கப்பதக்கம் அறுவடையை தொடங்கிய ஒலிம்பிக் இதுதான். ஆக்கி போட்டியில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. எதிரணியிடம் இருந்து ஒரு கோல் கூட வாங்காமல் தூள் கிளப்பிய ஜெய்பால் சிங் முன்டா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான நெதர்லாந்தை போட்டுத்தாக்கி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இது தான். ஜாம்பவான் தயான்சந்த் 15 கோல்கள் போட்டு பிரமிக்க வைத்தார். இதில் இறுதிப்போட்டியில் அடித்த 2 கோல்களும் அடங்கும்.


Next Story