புதினை பற்றிய கவலையை விடுங்கள்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் கவனம் செலுத்துங்கள் - டிரம்ப்


புதினை பற்றிய கவலையை விடுங்கள்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் கவனம் செலுத்துங்கள் - டிரம்ப்
x

கோப்புப்படம்

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

ரஷியா-உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஒரு சமரச திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபருக்கு, அமெரிக்கா அழைப்பு விடுத்தது. இதையடுத்து வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இரு தலைவர்களும் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

இதனால் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியில் ஜெலன்ஸ்கி வெளியேறினார். இதையடுத்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார் ஜெலன்ஸ்கி. பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகிலுள்ள 200 ஆண்டுகள் பழமையான மாளிகையான லான்காஸ்டர் ஹவுஸில் இங்கிலாந்து பிரதமர் கெய்ரை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார்.

அப்போது இங்கிலாந்து உங்களுக்கு முழு ஆதரவு உள்ளது. நாங்கள் உக்ரைனுடன், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் துணை நிற்போம் என்று கெய்ர் கூறினார். இதனிடையே ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக லண்டனில் ஐரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனை கூட்டத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஏற்பாடு செய்து இருந்தார்.

நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, ஸ்பெயின், கனடா, பின்லாந்து, சுவீடன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார். இதனைத்தொடர்ந்தது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் தங்களது ஆதரவை தெரிவித்தன.

இதனிடையே ரஷிய ஜனாதிபதி புதினுடன் டிரம்பின் வளர்ந்து வரும் நெருக்கம், ஐரோப்பா நாடுகளுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதினைப் பற்றி கவலைப்படுவதைக் குறைத்து, சட்டவிரோத குடியேற்றங்கள், வன்கொடுமை சம்பவங்கள், போதைப்பொருள் மற்றும் கொலைகாரர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதைப் பற்றி அதிக நேரம் கவலைப்பட வேண்டும். சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம்" என்று பதிவிட்டிருந்தார்.

தனது மற்றொரு பதிவில், "நான் பதவியேற்ற முதல் ஒரு மாதத்திற்குள் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை வரலாற்றுச் சிறப்புமிக்க அளவிற்குக் குறைக்க முடிந்தது. நமது நாட்டின் மீதான படையெடுப்பு முடிந்துவிட்டது. அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் எல்லை ரோந்துப் படையினரால் 8,326 சட்டவிரோத குடியேறிகள் மீது மட்டுமே வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் அனைவரும் விரைவாக நம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்" என்று அதில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Next Story