மோடி - புதின் சந்திப்பு: கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்


கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்
x
தினத்தந்தி 9 July 2024 7:36 AM GMT (Updated: 9 July 2024 7:38 AM GMT)

ரஷியா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

கீவ்,

இந்தியா-ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார். ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் இதுகுறித்த முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், மோடி - புதின் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி,

உக்ரைனில் இன்று ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக 13 குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இளம்வயது புற்றுநோயாளிகள் இருக்கும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை குறிவைத்து ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் மாஸ்கோவில் உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிப்பிடித்தது மிகவும் ஏமாற்றமாகவும், அமைதியின் மீது விழுந்த அடியைப் போலவும் இருக்கின்றது என்று புதினுடனான மோடியின் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார். கடந்த ஜூன் 14 அன்று இத்தாலியில் ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.



Next Story