காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 8 பேர் பலி

காசா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
காசா முனை,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீண்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் 59 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வருகிறது. மேலும், 2ம் கட்டத்தை இஸ்ரேல் அமல்படுத்த முன்வந்தால் ஒரு பணய கைதியை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், கொல்லப்பட்ட பணய கைதிகளில் 4 பேரின் உடல்களையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக இஸ்ரேல் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் இன்று வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்கு பகுதியிலுள்ள பெட் லகியா நகரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இதில், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் யாரேனும் உயிரிழந்தனரா? என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.