லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; சிரியா நாட்டின் 23 தொழிலாளர்கள் பலி


லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; சிரியா நாட்டின் 23 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 26 Sep 2024 11:22 AM GMT (Updated: 26 Sep 2024 12:32 PM GMT)

லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், சிரியா நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்த கட்டிடம் கடுமையாக பாதிப்படைந்தது.

பெய்ரூட்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி ஹிஜ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனால், காசா மற்றும் லெபனானை இலக்காக கொண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில், நேற்று வரை லெபனானில் பலியானோர் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 50 பேர் குழந்தைகள் ஆவர். 1,835 பேர் காயமடைந்து உள்ளனர் என லெபனான் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியா நாட்டின் எல்லையையொட்டி லெபனான் நாடு அமைந்து உள்ளது. இதன் கிழக்கே பெகா பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்த பழமையான பால்பெக் நகரருகே நேற்றிரவு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழி தாக்குதலில், சிரியா நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்த கட்டிடம் கடுமையாக பாதிப்படைந்தது.

இதில், 23 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் சிரியா நாட்டை சேர்ந்தவர்களும், 4 பேர் லெபனான் நாட்டை சேர்ந்தவர்களும் ஆவர். இதனை லெபனானில் இருந்து வெளிவரும் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Next Story