2-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது..? காசாவுக்கான உதவிகளை நிறுத்தியது இஸ்ரேல்


2-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது..? காசாவுக்கான உதவிகளை நிறுத்தியது இஸ்ரேல்
x

போர் நிறுத்தத்தை நீட்டிக்க அழுத்தம் தரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் காசா இடையே நடந்து வந்த போர், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் வற்புறுத்தலால், நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து இருநாடுகளும் ஜனவரி 19-ந்தேதி போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. ஒப்பந்தப்படி இஸ்ரேல்-காசா இடையே பணய கைதிகள் பறிமாற்றம் நடந்தது. இந்த ஒப்பந்தப்படி பல கட்டங்களாக ஏராளமான பணயகைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இன்னும் பல பணய கைதிகளை விடுவிக்க வேண்டி உள்ளது.

இந்த சூழலில் இரு தரப்பினரும் இன்னும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால் "அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தயாராக இருக்கிறது, காசா போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை" என்று இஸ்ரேல் கூறி வருகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தம் சனிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் காசாவுக்குள் உணவு, மருந்து உள்ளிட்ட இதர பொருட்கள் நுழைவதை இஸ்ரேல் நேற்றுடன் நிறுத்திவிட்டதாக அறிவித்தது.

போர் நிறுத்தத்தை நீட்டிக்க அழுத்தம் தரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் "அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்துடன் பேசிய பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்" தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

பாலஸ்தீனியர்கள் இஸ்லாமிய புனித ரமலான் மாதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கி உள்ளநிலையில், காசாவிற்கு உதவி செய்வதைத் தடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதன்படி "காசாவிற்குள் பொருட்கள் மற்றும் அனைத்து நுழைவையும் தடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது அமைச்சரவையை சந்திப்பதற்கு முன்பு தெரிவித்தார்.

மேலும் "ஹமாஸ் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், மேலும் விளைவுகள் ஏற்படும்" என்றும் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்தார்.


Next Story