இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழப்பு: ஈரான்


இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழப்பு: ஈரான்
x

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

தெஹ்ரான்,

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 2 ஆம் தேதி ஈரான் தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இன்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. சில மணி நேரம் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்த நிலையில், தாக்குதல் முடிந்துவிட்டதாகவும் தங்களுடைய விமானங்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் தங்கள் நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று ஈரான் கூறியுள்ளது. அதேவேளையில், இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சரியான முறையில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story