முதல் 2 நிமிடங்களிலேயே... புதினுடனான சந்திப்பு பற்றிய கேள்விக்கு டிரம்ப் பதில்


முதல் 2 நிமிடங்களிலேயே... புதினுடனான சந்திப்பு பற்றிய கேள்விக்கு டிரம்ப் பதில்
x

உக்ரைன் போரில் மிக மிக விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன் டி.சி.,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த விவகாரத்தில் புதின் சற்று இறங்கி வந்துள்ளார். இதன்படி, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வருகிற 15-ந்தேதி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை டிரம்ப், அவருடைய ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேசும்போது அவரிடம், அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே இயல்பான வர்த்தகம் இருக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், ரஷியா மிக பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது. ரஷியா போரில் ஈடுபடும் நாடு. அதனையே அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் நிறைய போர்களில் ஈடுபட்டு உள்ளனர். என்னுடைய நண்பர் ஒருவர், ரஷியா கடுமை வாய்ந்த நாடு. ஏனெனில், அது தொடர்ந்து போரில் ஈடுபட கூடியது என்றார்.

அதனால், போருக்கு பதிலாக புதின் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவாரா? என்ற கேள்வி உள்ளது. விளாடிமிர் புதினுடன் நாங்கள் சந்திப்பு ஒன்றை நடத்த இருக்கிறோம். அந்த கூட்ட முடிவில், அவ்வளவு ஏன் முதல் 2 நிமிடங்களில் ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா? என்பது எனக்கு சரியாக தெரிந்து விடும் என டிரம்ப் கூறினார்.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்த்து இருக்கிறேன். இரு தரப்புக்கும் இடையே சிறந்த ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் என நான் பார்க்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய தலைவர்கள் பலரும் என்னை அதிகம் நம்பியுள்ளனர். என்னால் அது முடியவில்லை என்றால், கடைசி நபர் உயிரிழக்கும் வரை இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்படாது என்றார்.

இந்த கூட்டம் நல்ல முறையில் நடக்க போகிறது. நாம் இன்னும் முன்னேறி செல்வோம். ஒப்பந்தம் ஏற்படுத்துவோம். மிக மிக விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும். அதனை உடனடியாக பார்க்க நான் விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

1 More update

Next Story