எக்ஸ் சமூக வலைத்தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்துள்ளார். ஆனால், வேறு யாருக்கும் இல்லை.
வாஷிங்டன்,
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் நிறுவனருமான எலான் மஸ்க், ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கினார். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை எக்ஸ் என மாற்றினார். பிரபலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த புளு டிக் வசதியை பணம் செலுத்தி யார் வேண்டும் என்றாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற வசதியை கொடுத்தார். இப்படி எக்ஸ் தளத்தில் அவர் செய்த அதிரடி நடவடிக்கைகளை சொல்லிக்கொண்டே செல்லலாம்.
இந்த நிலையில், தனது நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ நிறுவனத்துக்கு எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு எலான் மஸ்க் விற்றுள்ளார். இது குறித்து எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாவது, 'எக்ஸ் நிறுவனத்தை, எக்ஸ் ஏ.ஐ நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தரவு, மாதிரிகள், கணினி, விநியோகம் மற்றும் திறமையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எக்ஸ் ஏ.ஐ மற்றும் எக்ஸ்-இல் உள்ள அனைவரின் கடுமையான அர்ப்பணிப்பையும் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.