ஹமாஸ் தலைவர் சின்வார் மரணம்... போர் முடிவுக்கான வாய்ப்பு: கமலா ஹாரிஸ்


ஹமாஸ் தலைவர் சின்வார் மரணம்... போர் முடிவுக்கான வாய்ப்பு: கமலா ஹாரிஸ்
x
தினத்தந்தி 17 Oct 2024 10:34 PM GMT (Updated: 17 Oct 2024 10:41 PM GMT)

சின்வார் மரணம் அடைந்த நிலையில், ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மனநிம்மதிக்கான உணர்வு ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறேன் என கமலா ஹாரிஸ் பேசியுள்ளார்.

வாஷிங்டன்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான, ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வாரை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்கி அழித்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பேசும்போது, ஹமாஸ் தலைவர் சின்வார் மரணம் அடைந்து உள்ளார் என இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. நீதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஒட்டு மொத்த உலகத்திற்கும் நன்மை ஏற்பட்டு உள்ளது. சின்வாரின் கைகளில் அமெரிக்காவின் ரத்தம் இருந்தது.

ஆனால் தற்போது, ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மனநிம்மதிக்கான உணர்வு ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறேன். கடந்த ஆண்டில், சின்வார் மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிற தலைவர்களின் இருப்பிடம் பற்றி அறிய, இஸ்ரேல் வீரர்களுடன் இணைந்து, அமெரிக்க சிறப்பு நடவடிக்கை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்களுடைய பணியை பாராட்டுகிறேன்.

அமெரிக்கர்களை படுகொலை செய்யும், அச்சுறுத்தும் அல்லது நம்முடைய படைகளை அச்சுறுத்தும் எந்தவொரு பயங்கரவாதிக்கும் நான் கூறுவது என்னவெனில், நாங்கள் உங்களை நீதியின் முன் நிறுத்துவோம்.

இஸ்ரேல், தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது. இஸ்ரேலுக்கு விடுத்த ஹமாஸ் அமைப்பின் மிரட்டல் நீக்கப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கி தெளிவான முன்னேற்றம் இன்று ஏற்பட்டு உள்ளது. ஹமாஸ் அழிக்கப்பட்டு, அதன் தலைமை நீக்கப்பட்டு உள்ளது.

இதனால் காசாவில் போர் முடிவுக்கு வருவதற்கான ஒரு வாய்ப்பை இந்த தருணம் நமக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. போர் நிச்சயம் முடிவுக்கு வரவேண்டும். இதனால், இஸ்ரேல் பாதுகாக்கப்படுவதுடன், பணய கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். காசாவில் பாதிப்பு முடிவுக்கு வரும். பாலஸ்தீனிய மக்கள் தங்களுடைய கண்ணியம், பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் சுய நிர்ணயம் செய்வதற்கான உரிமையை உணர்வார்கள் என்று பேசியுள்ளார்.


Next Story