த.வெ.க. தொண்டர்கள் உயிரிழப்பு - விஜய் இரங்கல்

உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க. உறுதுணையாக இருக்கும் என விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு முன்பும், பின்பும் உயிரிழந்த த.வெ.க. தொண்டர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-
“நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி காளிராஜ் ஆகியோர் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு முன்பும் பின்பும் காலமான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
நம் கழகத்திற்கான இவர்களது பற்றுறுதியும், பங்களிப்பும் என்றென்றும் நம் நினைவில் நிற்கும். அவர்கள் விரும்பிய லட்சிய சமுதாயத்தை நாம் படைத்துக் காட்டுவோம். கழகத் தோழர்களை பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காலமான கழகத் தோழர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பங்களுக்கு நம் கழகம் உறுதுணையாக இருக்கும்.”
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.






