வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கிறார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு


வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கிறார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு
x
தினத்தந்தி 20 March 2025 8:46 AM (Updated: 20 March 2025 9:51 AM)
t-max-icont-min-icon

வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் செயல்பாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு அமைச்சர் மெய்யநாதன் தரப்பில், அதனை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.

அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மாநில அரசு நடத்தக் கூடாது என்று எந்த சுப்ரீம்கோர்ட்டும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இடஒதுக்கீடு தொடர்பான சில கருத்துகளை முன்வைத்தார். மேலும் இருந்த இடத்தைவிட்டு எழுந்து அமைச்சர்களை நோக்கி கைகளை நீட்டி பேசினார்.

இதனையடுத்து சபாநாயகர் இருக்கை முன்பு சென்று பேசுவதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டதோடு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அப்போது சபாநாயகர் அப்பாவு அமைதியாக இருக்குமாறு கூறிய போதும், அவர் தொடர்ந்து கோஷம் எழுப்பி கொண்டே இருந்தார்.

இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபமடைந்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார். இது வேதனை அளிப்பதாக இருக்கிறது. அவை மாண்பை மீறி வேல்முருகன் நடந்து கொள்ளக் கூடாது. இருக்கையை விட்டு வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல. இதனால் வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "வேல்முருகன் இருக்கையை விட்டு வெளியே வந்து ஒருமையில் பேசியது நாகரீகமான செயல் அல்ல. இது ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டசபை உறுப்பினர் வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதுபோல் இனி நடந்து கொள்ள கூடாது. இந்த ஒருமுறை மன்னிக்கிறோம். இனி இப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story