புதிய பாம்பன் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்


புதிய பாம்பன் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2024 9:29 AM GMT (Updated: 17 Oct 2024 9:34 AM GMT)

புதிய பாலத்தை 90 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் கடந்து சென்றது.

ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.

இந்த பாலத்தில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று முடிந்துள்ளன. புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து நேற்று முன் தினம் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர், மண்டபம் வந்தார். தொடர்ந்து பாம்பன் வந்த அவர், டிராலியில் அமர்ந்து புதிய ரெயில் பாலத்தை பார்வையிட்டார். அப்போது ஆய்வுக்காக தூக்குப்பாலமானது 17 மீட்டர் உயரத்திற்கு முழுவதுமாக திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மூடப்பட்டது.

இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் இன்று ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை புதிய பாம்பன் பாலத்தில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது 90 கிலோமீட்டர் வேகத்தில் புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது. இம்மாதத்திற்குள் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்படும் என தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story