ரெயில்கள் ரத்து எதிரொலி - கூடுதல் பஸ்கள் இயக்கம்


ரெயில்கள் ரத்து எதிரொலி - கூடுதல் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 2 Dec 2024 4:20 AM (Updated: 2 Dec 2024 4:28 AM)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அருகே ரெயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அவ்வழியாக இயக்கப்படும் ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று காலை புறப்பட வேண்டிய ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.

அதேபோல, தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல இடங்களில் இருந்து சென்னை வரும் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, கொல்லம், நாகர்கோவில் விரைவு ரெயில்கள் விழுப்புரத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் நீண்ட நேரம் விழுப்புரம் ரெயில் நிலையத்திலேயே பயணிகள் காத்துக்கிடக்கின்றனர். இந்தநிலையில், விழுப்புரத்தில் ரெயில்கள் ரத்து எதிரொலியாக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் ரெயில்வே சந்திப்பு, திருக்கோவிலூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் - சென்னை ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

1 More update

Next Story