இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025
x
தினத்தந்தி 25 Jan 2025 3:28 AM (Updated: 26 Jan 2025 3:28 AM)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சென்னை


Live Updates

  • 25 Jan 2025 7:25 AM

    வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

    தி.மு.க. அரசின் கீழ் நடக்கும் இந்த விசாரணையின் மீது, பொதுமக்களுக்கு துளியளவு நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் நோக்கமாகத் தெரிகிறது.

    எனவே, இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில், சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை. சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • 25 Jan 2025 6:57 AM

    அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல் பற்றி விசாரணை தேவை: அன்புமணி ராமதாஸ்

    இனிவரும் காலங்களில் மருத்துவமனையில் உயிரிழக்கும் நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் 18 கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்றதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • 25 Jan 2025 6:56 AM

    உலகளாவிய உதவி திட்டங்களுக்கான நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசு முடிவு

    உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    இதன்படி, இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான மனிதாபிமான உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளைத் தவிர அனைத்து வெளிநாட்டு உதவிகளுக்கான புதிய நிதியை அமெரிக்க வெளியுறவுத்துறை முடக்கியுள்ளது.


  • 25 Jan 2025 6:53 AM

    தாளமுத்து-நடராசன் இருவருக்கும் திருவுருவச் சிலை நிறுவப்படும்: முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


    தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது! மொழிப்போர்த் தியாகிகளுக்கு எம் வீரவணக்கம்! தமிழ்_வெல்லும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


  • 25 Jan 2025 6:50 AM

    தாய்மொழி காக்க தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம் - விஜய்


    உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 


  • 25 Jan 2025 6:37 AM

    'என்னை விலை பேச இந்த மண்ணில் யாரும் பிறக்கவில்லை' - திருமாவளவன் ஆவேசம்


    என்னை விலை பேச இந்த மண்ணில் யாரும் பிறக்கவில்லை. தமிழக அரசை கவிழ்ப்பதற்கு தொடர்ச்சியாக சதி செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் கோரிக்கை வைக்கக் கூடியவர்களாக மட்டும் இருக்க கூடாது, கோட்பாடுகளை பாதுகாக்க கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். 

  • 25 Jan 2025 6:26 AM

    தமிழக காவலர்கள் 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு


    தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஸ்டாலின், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், பிரபாகரன், இணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், கூடுதல் ஆணையர் வீரபாண்டி, இணை காவல் கண்காணிப்பாளர் பாபு உள்ளிட்ட 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 25 Jan 2025 6:23 AM

    இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது


    இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    கட்டரகாமா பகுதியில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்ற புலனாய்வுப் பிரிவினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

  • 25 Jan 2025 6:20 AM

    வார கடைசியில் மாற்றமின்றி விற்பனையாகும் தங்கம்...இன்றைய நிலவரம் என்ன?


    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.60,440-க்கும், ஒரு கிராம் ரூ.7,555-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 25 Jan 2025 5:39 AM

    மும்பை தாக்குதல் பயங்கரவாதி - இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு அனுமதி

    மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணாவை கடந்த 2009-ம் ஆண்டு எப்.பி.ஐ. அதிகாரிகள் சிகாகோவில் கைது செய்தனர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தஹாவூர் ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது.

    தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி, கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டுகளில் தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 


Next Story