5 ஆண்டுக்கு கொடி பறக்கணும் - மாநாட்டு திடலின் விவசாயியிடம் தவெக ஒப்பந்தம் என தகவல்


5 ஆண்டுக்கு கொடி பறக்கணும் - மாநாட்டு திடலின் விவசாயியிடம் தவெக ஒப்பந்தம் என தகவல்
x

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. வெற்றிக் கொள்கை திருவிழாவாக மாநாட்டை கொண்டாட முழு அளவில் தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகி வருகிறது. மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள சூழலில் மாநாட்டு திடலில் முழுவீச்சில் பணிகள் நடந்து வருகிறது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தினசரி அங்கு நடைபெறும் ஒவ்வொரு பணிகளும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்தநிலையில் தமிழகம் முழுவதிலும் இருந்து விஜய் கட்சி தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி புறப்படுவதற்கு தயாராகி வருகிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்கு தனித்தனி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரும்போது மற்றும் மாநாடு முடிந்து திரும்பி செல்லும்போது நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பிரத்யேக குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அனைவரும் மதியம் 2 மணிக்குள் மாநாட்டு பந்தலுக்குள் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் அனைவரும் விஜய் படம் போட்ட டி-ஷர்ட் மற்றும் தொப்பி அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் சீருடையில் வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாநாடு சரியாக 4 மணிக்கு தொடங்குகிறது. இதனையடுத்து விஜய் சிறப்புரை ஆற்றுவார். இரவு 8 மணியளவில் அவர் தனது பேச்சை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 மணி அல்லது 9.30 மணி அளவில் மாநாடு நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக-வின் முதல் மாநாட்டில் 100 அடிக்கு வைக்கப்படும் கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றுகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். கொடி கம்பத்தை, அடுத்து 5 ஆண்டுகளுக்கு அப்புறப்படுத்தப்படக்கூடாது என்று மாநாட்டு திடலின் சொந்தக்காரரான விவசாயி மணி என்பவருடன் தவெக சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விஜய் பேச்சை கேட்பதற்காக கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story