தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது

பள்ளி தலைமை ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவிகள் புகார் அளித்தனர்.
தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர்களுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த 3-ந்தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.
இதனிடையே திருப்பூர் வெங்கமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சம்பத்குமார் இன்று நடந்த பிளஸ் 2 தேர்வுக்கான தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவிகளிடம் சோதனை செய்து தேர்வு எழுத அனுமதித்தார்.
தொடர்ந்து தேர்வு எழுதிய மாணவிகள், தங்களிடம் சோதனை செய்த தேர்வு அறை கண்காணிப்பாளர் சம்பத்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து புகார் தெரிவித்தனர். பள்ளி தலைமையாசிரியர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர், மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பத்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமார் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.