டாஸ்மாக் விவகாரம்: வரும் 25ஆம் தேதி வரை நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு


டாஸ்மாக் விவகாரம்: வரும் 25ஆம் தேதி வரை நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 March 2025 7:01 AM (Updated: 20 March 2025 10:18 AM)
t-max-icont-min-icon

அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என, 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான ரிப்போர்ட்டை அமலாக்கத்துறை வெளியிட்டது.

அதில், "தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது. கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அதில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிறுவனமும் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது.

இதன்படி இதுதொடர்பான் மனுக்கள் மீது நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.

அப்போது, "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கி உள்ளது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டத்ற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்" என்று டாஸ்மாக் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், "சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அமலாக்கத்துறை பிரிவு 17ன் படி எல்லா இடங்களிலும், ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா? 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்" என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "எதற்காக சோதனை நடத்தப்படுகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினீர்களா? இரவு நேரத்திலும் சோதனையா?" என்று கேட்டனர். அதற்கு, "இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை. யாரையும் துன்புறுத்தவில்லை" என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்?.. அமலாக்கத்துறைகு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்" என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வரும் 25ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு தடைவிதித்த நீதிபதிகள், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.


Next Story