டேங்கர் லாரி ஸ்டிரைக்; கோவையில் பேச்சுவார்த்தை தோல்வி... தொடரும் போராட்டம்

வீட்டில் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை,
தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், நாமக்கல்லில் அந்த சங்கத்தின் தலைவர் கே. சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது,
இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், தமிழகம், கேரளம், தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 4,000 லாரிகளை துறைமுகத்திலிருந்து எரிவாயு பாட்டிலிங் பிளான்டுக்கு டேங்கர்களில் எரிவாயுவை எடுத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
2025-2030 வரையிலான ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்த கூடாது, மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுநர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மூன்று கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் தென் மண்டல அளவில் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும்.
தென் மண்டலம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட முன்வந்துள்ளன. வருவாய் இழப்பை காட்டிலும் வேலை வாய்ப்பு பறிபோக கூடாது என்ற எண்ணத்திலேயே இந்த போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கூறினார்.
இதனையடுத்து இன்று கோவையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதில், பெயர் மாற்றத்திற்கு அனுமதி, அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று கோவையில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றால், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் வீட்டில் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.