நடத்தையில் சந்தேகம்: இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர்

இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு முரண்பாடான தகவல் கிடைத்தது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துப்பாண்டியன் (வயது 38). இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி. மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தில் இவர் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி முத்துக்குமாரி (28). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். முத்துக்குமாரி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்று விட்டார்.
4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வந்த அவர் முத்துப்பாண்டியனுடன் சோ்ந்து வாழ்ந்து வந்தார். இருந்தபோதும், மனைவியின் நடத்தையில் முத்துப்பாண்டியனுக்கு சந்தேகம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தகராறில் முத்துக்குமாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முத்துப்பாண்டியன் சின்னகோவிலாங்குளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய முத்துக்குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உடல் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு முரண்பாடான தகவல் கிடைத்தது.
அதாவது, முத்துக்குமாரி மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பாண்டியனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சம்பவத்தன்று மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட முத்துப்பாண்டியன் ஆத்திரத்தில் முத்துக்குமாரியின் கழுத்தை நெரித்தும், அவரது மூக்கு, வாயை பொத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், உடலை தூக்கில் தொங்கவிட்டு, தனது மனைவி தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு முத்துப்பாண்டியனை கைது செய்தனர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






