மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்


மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
x

கோப்புப்படம் 

அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் மீது கூடுதல் கவனம் செலுத்தி பெரு நிறுவனங்களை அதிகளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் நடப்பாண்டில் 38 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

2021 - 22ம் ஆண்டில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் 68 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து, நடப்பாண்டில் 38 சதவீதமாக சரிந்திருப்பது அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளின் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

Apple, TCS, Wipro, Infosys உள்ளிட்ட 210 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற வளாக நேர்காணலில் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே தேர்வாகியிருப்பது அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளை விரும்பி தேர்ந்தெடுக்கும் மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் கவலையடையச் செய்திருக்கிறது.

நாட்டின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் பயின்றால் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நம்பிக்கையில் வரும் மாணவ, மாணவியர்களின் எதிர்கால கனவை நீர்த்துப் போகும் அளவிற்கு நடப்பாண்டில் நடைபெற்ற வளாக நேர்காணல் அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் மீது கூடுதல் கவனம் செலுத்தி பெரு நிறுவனங்களை அதிகளவில் பங்கேற்கச் செய்வதோடு, அந்த நேர்காணலில் தேர்வாகக் கூடிய அளவிற்கு மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனையும் மேம்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story