ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு


ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு
x

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1,279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ. 372.06 கோடி வழங்கிட நிதி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (போக்குவரத்து துறை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 414 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கிட 29/03/2023 அன்று உத்தரவிட்டார்கள்.

அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற. விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்கடியிலும், தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர், கருணை உள்ளத்தோடு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story