ராமேசுவரம் மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

ராமேசுவரம் மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ராமேசுவரம்,
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 3 பேரை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யபட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இத நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 3 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராமேசுவரம் துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.