பாம்பன் புதிய ரெயில் தூக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை தீவிரம்


பாம்பன் புதிய ரெயில் தூக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை தீவிரம்
x

பாம்பன் புதிய ரெயில் தூக்குப்பாலத்தை தொடர்ந்து திறந்து மூடும் சோதனை நடந்தது.

ராமேசுவரம்,

பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், சுமார் 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவில் ஆன தூக்குப்பாலமும் கட்டப்பட்டுள்ளது.

அதுபோல் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் கடந்த சில நாட்களாகவே சரக்கு பெட்டிகளுடன் கூடிய என்ஜின் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் ரோடு பால உயரத்திற்கு 17 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடியும் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்கு பாலம் நேற்றும் 17 மீட்டர் உயரத்துக்கு திறக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நேற்று காலையிலிருந்து மாலை வரையிலும் பல முறை தூக்குப்பாலம் திறக்கப்பட்டிருந்ததை ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்து செல்போனில் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

இன்னும் ஒரு வாரத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்ய உள்ளார். ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்கு பின்னர் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்டு மீண்டும் ராமேசுவரம் வரை ரெயில் போக்குவரத்து தொடங்கும் தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது. அடுத்த (நவம்பர்) மாதத்தில் இரண்டாவது வாரத்திற்குள் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறந்து ெரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் புதிய ரெயில் பால திறப்பு விழா நிகழ்ச்சியை பஸ் நிலையம் அருகே ராமேசுவரம் நகராட்சி சுங்கச்சாவடி எதிரே உள்ள கோவிலுக்கு சொந்தமான ஆலய வளாகத்தில் நடத்துவதற்கும் ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Next Story