காதலன் இறந்த துக்கத்தில் நர்சிங் மாணவி தற்கொலை


காதலன் இறந்த துக்கத்தில் நர்சிங் மாணவி தற்கொலை
x

காதலன் இறந்த துக்கத்தில் நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கே.குரும்பப்பட்டியை சேர்ந்தவர் சித்திரைவேல் (வயது 55). அவருடைய மகள் நித்தியரூபிணி. இவர், நிலக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த சுப்பையா மகன் ஜெயசீலன். இவரும், நித்தியரூபிணியும் உறவினர்கள்.

இவர்கள் 2 பேரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனை அறிந்த இருவீட்டாரும், காதலை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்கிடையில் ஜெயசீலன் திருப்பூரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அதன்படி கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர், திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கிய ஜெயசீலன் பரிதாபமாக இறந்தார்.

மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய ஜெயசீலனை பிணக்கோலத்தில் பார்த்தது அவர்களது உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் தாலிக்கட்ட வேண்டிய ஜெயசீலன் சடலமானதை நினைத்து நித்தியரூபிணி பேரதிர்ச்சி அடைந்தார். அன்றைய நாளில் இருந்து நித்தியரூபிணி யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்தார். ஜெயசீலனின் நினைவு அவளை வாட்டி வதைத்தது.

இந்த நிலையில், மனம் உடைந்த நித்தியரூபிணி சம்பவத்தன்று இரவு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் நித்தியரூபிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் இறந்த துக்கத்தில், நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story