முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள்: வெளியான புதிய அறிவிப்புகள் என்னென்ன..?


முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள்: வெளியான புதிய அறிவிப்புகள் என்னென்ன..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 March 2025 6:04 AM (Updated: 14 March 2025 7:01 AM)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னை,

2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 63246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

கோவை மாநகரில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் 10.740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரெயில் அமைக்கப்படுவதற்கான பணி தொடங்கப்படும்.

தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும். கலங்கரை விளக்கத்திலிருந்து ஐகோர்ட்டு வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ ரெயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்..

தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு, தலைநகர் புதுடெல்லி - மீரட் நகரங்களுக்கிடையே மித அதிவேக ரெயில் போக்குவரத்தை உருவாக்கி இயக்கப்படுவதைப் போன்று, மண்டல விரைவுப் போக்குவரத்தை (Regional Rapid Transit System-RRTS) தமிழ்நாட்டிலும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் (Semi High Speed Railway) அமைப்பினை பின்வரும் வழித்தடங்களில் உருவாக்கிட சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்

மாமல்லபுரம். உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அப்பகுதிகளில் நிலவும் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மையை கருத்தில் கொண்டும் ரோப்வே (Ropeway) உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story