மதுரை தவெக மாநாடு: 100 அடி கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு

மாநாட்டின் தொடக்கமாக விஜய் கொடியேற்ற இருந்த கம்பம் திடீரென கீழே விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை:
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை (21-ந்தேதி, வியாழக்கிழமை) பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் இப்படிப்பட்ட மாநாட்டை நடத்தியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 506 ஏக்கரில் மாநாட்டு திடல், 2 பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பெண்களுக்கான “பிங்க் ரூம்” வசதி என ஒவ்வொன்றையும் மேற்பார்வையிட மேலாண்மை குழு அமைத்து த.வெ.க. அமல்படுத்தியுள்ளது.
மாநாட்டு முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு தொடங்கும் போது கொடியை விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக கொடிக்கம்பம் ராட்சத கிரேன் மூலம் நடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்தது. தவெக நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கிரேனில் உள்ள பெல்ட் அறுந்தததில் கொடிக்கம்பம் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீழே விழுந்த கொடிக்கம்பத்தை மீட்டு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.






