தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றுவோம் - எல். முருகன்


தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றுவோம் - எல். முருகன்
x
தினத்தந்தி 21 Feb 2025 6:49 AM (Updated: 21 Feb 2025 8:36 AM)
t-max-icont-min-icon

இன்று 'உலக தாய்மொழி' தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னை,

உலக தாய் மொழி நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 'தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றுவோம்' என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் அதில் பதிவிட்டு இருப்பதாவது;

"உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து மக்களும், தங்களது தாய்மொழியை போற்றுகின்ற வண்ணம், இன்றைய தினமானது 'உலக தாய்மொழி' தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், பன்முகத் தன்மை கொண்ட நமது பாரத தேசத்தில் உள்ள அனைவரும், அவர்தம் தாய்மொழியை நேசிக்கின்ற மற்றும் எண்ணிப் பெருமை கொள்கின்ற தினமாக இன்றைய தினம் அமைந்திட எனது தாய்மொழி தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், எண்ணற்ற மொழிகளுக்கு ஆதி மொழியாய் நின்று, பல்லாயிரம் ஆண்டுகளாய் செழித்து தமிழர்களின் மனதில் ஆழ வேரூன்றி நிற்கும் தமிழ் மொழியை, தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமையுடன் போற்றுவோம்.

அதேசமயம், சிறுவயது முதலே தாய்மொழி வழிக் கல்வியில் நமது கற்றல் திறனை தொடங்குவது என்பது, ஒவ்வொரு மனிதரிடத்திலும் தனது மொழியின் பண்புகளான மனிதம் மற்றும் அனைத்து உயிர்களிடத்திலான நேசத்தை வலுப்படுத்துகிறது. அவ்வாறான பண்பை தேசம் முழுவதும் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற 'புதிய கல்விக் கொள்கையை' ஏற்படுத்திக் கொடுத்த நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story