தமிழகத்திலுள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் பேசியது அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன்

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என திருமாவளவன் கூறினார்.
சென்னை,
பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத்திலுள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் பேசியது தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக பேசியதாவது;
”பீகாரிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு இங்கே எந்த பிரச்சினையும் இல்லை. தமிழகத்திலுள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு. இது ஆபத்தான அணுகுமுறை. பீகாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இத்தகைய அரசியலை செய்கிறது.
பிரதமரே இப்படி பேசியிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. பிரதமரின் இந்த கருத்து ஏற்கத்தக்கது அல்ல. பீகாரை சார்ந்தவர்கள் தமிழகத்தில் ஏதேனும் புகார் அளித்தார்களா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா என தெரியவில்லை. பிரதமரின் பேச்சை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ” என்றார்.






