"சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் 'திராவிடம்' வீழாது" - உதயநிதி ஸ்டாலின்


சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது - உதயநிதி ஸ்டாலின்
x

மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

'டிடி தமிழ்' சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) கொண்டாடப்பட்டது.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாயின் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள 'தெக்கணும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள்.

ஆனால் இன்றைக்கு, கவர்னர் பங்கேற்போடு நடைபெற்ற 'டிடி தமிழ்' இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து 'திராவிடநல் திருநாடு' எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள்.

யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது #திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம்.

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் 'திராவிடம்' வீழாது! இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, 'கண்ணியம்' குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, மத்திய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


Next Story