கோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி


கோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
x

கோப்புப்படம் 

கோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சாதாரண நாட்களில் இலவச தரிசனம் உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விசேஷ நாட்களில் விரைவு தரிசன கட்டணம் இரட்டிப்பாக, அதாவது ரூ.200 வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர். இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பக்தர்கள் கைதானார்கள். பின்னர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா விரைவில் தொடங்க உள்ளது. இதில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல. கந்த சஷ்டி விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள், கடவுளை தரிசனம் செய்வது மிகவும் கடினமாகிவிடும்.

எனவே கந்த சஷ்டி விழாவின்போது தரிசனத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தரிசனத்துக்கு ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கவும், இதற்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவில்களில் தரிசனம் செய்வதற்கு ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்தால், ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்வார்கள்? அவர்களால் இந்த தொகையை செலுத்த இயலுமா? கட்டணம் ஏன்? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர்.

பின்னர் இந்த மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.


Next Story