பாதிக்கப்பட்டவர்களை அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர் - ஐகோர்ட்டு கடும் கண்டனம்

அரசும் காவல்துறைக்கு ஆதரவாக இருப்பது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதி தெரிவித்தார்.
சென்னை,
பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டிய சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஐகோர்ட்டில் ஆஜரான சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டிடம், "பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஏன் வாக்குமூலம் பதிவு செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மாஜிஸ்திரேட், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் அதை போலீசார் திருப்பி அனுப்பியதாக தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் தரப்பிடம், "உங்கள் மோசடிக்கு நீதிமன்றத்தையும் உடந்தை ஆக்குவதா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "வாக்குமூலம் பதிவு செய்ய வந்த பாதிக்கப்பட்டவரை ஏன் இப்படி துன்புறுத்துகிறீர்கள்? குற்றவாளிகளைக் கூட நீங்கள் இப்படி துன்புறுத்தியதில்லை" என்று குறிப்பிட்டார். மேலும், "குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மட்டும்தான் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று எந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, "மனஉளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர், சட்டத்தில் உள்ளதை செயல்படுத்த மறுத்து தெனாவட்டாக செயல்படுகின்றனர். நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அரசும் காவல்துறைக்கு ஆதரவாக இருப்பது துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்ட நீதிபதி, இதுபோல் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை நேரடியாக நீதிமன்றம் பணிநீக்கம் செய்து உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






