மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை, வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்


மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

மதுரை,

மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில 6 நாட்களாக காலை, மாலை என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து வெள்ள காடாக காட்சியளிக்கிறது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

உசிலம்பட்டி, செல்லம்பட்டி, வாலாந்தூர், வி.பெருமாள்பட்டி, பண்ணப்பட்டி, செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர், உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. வி.பெருமாள் பட்டி, பண்ணப்பட்டி, கொங்கபட்டி உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீர் ஊருக்குள் புகுந்து, வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Next Story