கனமழை: மீட்பு பணிக்கு முப்படைகளும் தயார்; பாதுகாப்பு அமைச்சகம் தகவல்


கனமழை:  மீட்பு பணிக்கு முப்படைகளும் தயார்; பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
x

கனமழையை முன்னிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கில் 490 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரி மற்றும் ஆந்திரா நெல்லூர் பகுதியில் இருந்து 500 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலையில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர் - புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழையை முன்னிட்டு மீட்பு பணிக்கு முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வடதமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன. அரக்கோணம் கப்பல் படை வீரர்கள், மத்திய கடலோர காவல் படையினரும் படகுகளுடன் தயாராக உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 13 கம்பெனிகளுக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story