திமுகவினர் குறுநில மன்னர்கள்போல் செயல்படுகின்றனர் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திமுகவினர் அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுகவில் கட்சி ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு, கடந்த வாரம் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி, தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தர்ம செல்வன் என்பவர் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன், கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சை ஆகியுள்ளது.
இவ்வாறு தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியதாக கூறப்படும் ஆடியோவில், மாவட்டத்தில் எந்த அதிகாரிகளும் என்னை மீறி செயல்படக் கூடாது. நீங்கள் நினைக்கும் ஆட்களைச் சொல்லி மாற்ற முடியாது. நான் லெட்டர் வைத்தால்தான் மாற்ற முடியும்.
மாவட்ட கலெக்டர், எஸ்.பி. என அரசு அதிகாரிகள் வரை அனைவரும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேம் விளையாட இங்கு இடமில்லை. கேம் விளையாடினால் கதை முடிந்துவிடும். நான் சொல்வதை கேட்கும் நபர்களுக்கு மட்டுமே இங்கு இடம் உண்டு. கேட்காத பட்சத்தில், அவர்கள் உடனடியாக இங்கிருந்து தூக்கியடிக்கப்படுவார்கள் என்று மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசி இருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியாகி வைரலாகியது.இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன.தருமபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருவதன் எடுத்துக்காட்டு தான் இது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. திமுகவினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது. மேலும் இந்த ஆட்சியில் அதிகாரிகள் அத்துமீறுவதும், காவல்துறை ஏவல்துறையாக மாறியிருப்பதும் இத்தகைய அழுத்தத்தால் தானா என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் அமைந்துள்ளது.
மாவட்ட கலெக்டரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும் என பதிவிட்டுள்ளார்.






