டி.ஜி.பி.யை கூட நியமிக்க முடியாத அரசாக தி.மு.க. உள்ளது- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி திமுக அரசு நடந்துகொள்ளவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மதுரை,
"மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று மதியம் விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள 16 கால் மண்டபம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க முடியாது. எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் இதுபோல் முறைகேடு நடந்துள்ளது. .
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசாக தி.மு.க. உள்ளது. புதிய டி.ஜி.பி. தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. 8 டி.ஜி.பி.க்கு பிறகு 9-வது டி.ஜி.பி.யாக இருப்பவர், பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
ஓய்வுபெறும் நாள் இந்த அரசுக்கு முன்பே தெரிந்திருந்தும், திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி நடந்துகொள்ளவில்லை. இதனால், தகுதியுள்ள 8 டி.ஜி.பி.க்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இப்படி இருந்தால், இந்த அரசு எப்படி சரியாக நடக்கும்?. தி.மு.க. ஆட்சியில் காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது, மக்களை காவல்துறை பாதுகாக்கிறது. மக்களைக் காக்கும் காவல்துறையின் டி.ஜி.பி. பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு தி.மு.க. அரசு சென்றுவிட்டது. தகுதிவாய்ந்த டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட தி.மு.க. அரசு கேட்கவில்லை’ என்றார்






