பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்துள்ளது... விஜய் சாடல்

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த 13-ந் தேதி முதல் வாகன பிரசாரத்தில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
நாமக்கல்,
தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கிய பிறகு விக்கிரவாண்டி, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்ட மாநாடுகளை நடத்தினார். அதன் பிறகு, சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த 13-ந் தேதி முதல் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில், கடந்த 2 வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரத்தை நிறைவு செய்த விஜய், இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுக அவருக்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் வாகனம் மீது நின்றபடி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது,
வணக்கம் எல்லோரும் நல்லா இருக்கீங்களா..நாமக்கல் என்றாலே முட்டை உற்பத்தி தான் . கடந்த தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா ? நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யயப்படுகிறது. முட்டை பாதுகாப்பு பற்றிஆண்ட கட்சி, ஆளுங்கட்சி கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ . மருத்துவமனையில் நடந்த கிட்னி திருட்டில் நாமக்கல்லை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் . விசைத்தறி நெசவாளர்களையே அதிகம் பாதித்துள்ளது .
நம் ஆட்சி அமைந்ததும் இதில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கந்துவட்டி கொடுமையில் இதன் பாதிப்பு இருக்கிறது. அதனால், கிட்னி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வை உயர்த்தும் அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
சாலை வசதி, நல்ல குடிநீர், மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு இதைத்தான் நாம் செல்லும் ஊர்களில் கேட்கிறார்கள். இவை எல்லாம் அடிப்படை வசதி. இதை எல்லாம் சமரசம் இல்லாமல் செய்வோம். நான் புதிதாக சொல்லவில்லை என்கிறார்கள். நல்ல சாப்பாடு, நல்ல கல்வி, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து, சாலை வசதி, பாதுகாப்பு இதுதானே அடிப்படை வசதி. அதை செய்துகொடுப்போம் என்பதுதானே சரி.
நடப்புக்கு சாத்தியமானதை சொல்வோம். தி.மு.க. சொல்லும் பொய் வாக்குறுதிகளை சொல்லமாட்டோம். புதிதாக என்ன சொல்வது. செவ்வாய் கிராகத்தில் ஐ.டி. கம்பெனி,, வீட்டிற்குள் விமானம் ஓட்டப்படும். சி.எம். மாதிரி இப்படி அடித்துவிடுவோமா...பாசிச பா.ஜ.க. அரசோட நாங்கள் ஒத்துப்போகமாட்டோம். தி.மு.க. அரசுபோல் அன்டர்கிரவுண்ட் டீலிங் செய்யமாட்டோம்.ஜெயலலிதா மேடம் சொன்னதை மறந்து பொருந்தாத கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க. போல் இருக்கமாட்டோம். நீட் ஒழிக்கப்பட்டதா, கல்வி நிதி வழங்கப்பட்டதா, தமிழகத்திற்கு தேவையானதை பா.ஜ.க செய்யவில்லை. ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என எம்.ஜி.ஆர். தொண்டர்கள் கேட்கிறார்கள்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. நேரடி உறவுக்காரர்கள். அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை . தி.மு.க. , பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துள்ளது. தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்ட மாதிரி. தி.மு.க.- பா.ஜ.க.வெளியே அடிக்கிற மாதிரி அடித்துக்கொள்வார்கள். வேண்டாம் மக்களே, யோசிங்க. அதனால் திரும்பவும் சொல்கிறேன். 2026-ல் ஒன்று தவெக - இன்னொன்று தி.மு.க. . ஒன்று மாபெரும் மக்கள் சக்தி கொண்ட தவெக. மற்றொன்று கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் தி.மு.க இரண்டுக்கும் இடையேதான் போட்டி. . நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் கூறினார்.






