கோவை: மின்சார ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது-21 பேர் காயம்


கோவை: மின்சார ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது-21 பேர் காயம்
x

கோவை அருகே சாலைத்தடுப்பு சுவரில் மோதிய மின்சார ஆம்னி பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

கோவை ,

திருச்சியில் இருந்து கோவைக்கு தனியார் மின்சார ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த பஸ் திருப்பூரில் சில பயணிகளை இறக்கி விட்டு பிறகு கோவை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் 26 பயணிகள் இருந்தனர்.நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். அந்த பஸ் கோவை கருமத்தம்பட்டி மேம்பாலம் அருகே வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலை தடுப்புச்சுவர் மீது வேகமாக மோதியது.

இதனால் அயர்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் முன்பக்க இருக்கைகளின் மீது மோதியும், பஸ்சுக்குள் கீழே விழுந்தும் பலத்த காயம் அடைந்தனர். இதற்கிடையே ஆம்னி பஸ்சின் பேட்டரியில் இருந்து புகைமூட்டம் வந்தது. உடனே பஸ் டிரைவர் பயணிகளை சீக்கிரமாக பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு கூறினார். அதை கேட்ட பயணிகள் தூக்க கலக்கத்தில் பஸ்சில் இருந்து இறங்க முயன்றனர். இதில் சிலரால் பஸ்சில் இருந்து வேகமாக இறங்க முடியவில்லை.

இந்த நிலையில் அப்பகுதியில் லாரியை ஓட்டி வந்த சபரிமலை, மாற்று டிரைவர் ரமேஷ் ஆகியோர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையே பேட்டரியில் இருந்து எழுந்த புகை திடீரென்று, தீப்பிழம்பாக மாறி பஸ் முழுவதும் பரவியது. பின்னர் தீ வேகமாக பஸ் முழுவதும் குபுகுபு என்று பற்றி எரிந்தது.

குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த பஸ் முற்றிலும் எரிந்து கருகி எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 35), தரணிபதி (65) உள்பட 21 பேர் காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story