சென்னை சென்ட்ரல் அருகே திடீரென தீ பிடித்த கார் - போக்குவரத்து பாதிப்பு

இந்த தீ விபத்து காரணமாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை,
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் அருகிலுள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில், போக்குவரத்து சிக்னல் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் எஞ்சின் பகுதியிலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. இதை கவனித்த கார் டிரைவர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு, விரைந்து கீழே இறங்கினார். அவர் கீழே இறங்கியதையடுத்த சில நொடிகளிலேயே, கார் சட்டென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனை பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒருவித பதற்றம் நிலவியது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து காரணமாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.






