மதுரையில் டிரைவரை செருப்பால் அடித்த பஸ் நிலைய மேலாளர் - அதிர்ச்சி வீடியோ

பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து உதவி மேலாளர் திடீரென தனது செருப்பால் டிரைவர் கணேசனை அடித்துள்ளார்.
மதுரை,
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் ,கோயம்புத்தூர் ,சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக ஏராளமானோர் பயணிகள் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
அப்போது திருப்பூர் செல்லும் அரசு பஸ் ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து பேருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. வெகு நேரம் ஆகியும் பேருந்து எடுப்பதற்கு தாமதமான நிலையில் பஸ்சில் இருந்த பயணிகள் டிரைவர் கணேசனிடம் கேட்டபோது மேலாளர் கூறினால் மட்டும்தான் பேருந்து எடுத்துச் செல்ல முடியும் என கூறினார்.
பின்னர் பயணிகள் நேரடியாக ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்த போக்குவரத்து உதவி மேலாளரிடம் பஸ்சை விரைவாக எடுக்குமாறு கூறிய போது அங்கி சிறிது பரபரப்பான சூழல் நிலவியது. பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது நீங்கள் என்ன முன்பதிவு செய்தீர்களா நீங்கள் இப்படி என்னிடம் வாக்குவாதம் செய்தால் நீங்கள் போகும் இடத்திற்கு செல்ல முடியாது என பயணிகளை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து உதவி மேலாளர் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு ஆதரவாக அருகில் உள்ள அதிகாரிகளும் பேசியதால் பயணிகளுக்கும் உதவி மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த ஓட்டுநர் கணேசனை கடுமையாக திட்டியபடி அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அப்போது உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென டிரைவர் கணேசனை தனது செருப்பால் அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு பஸ் டிரைவர்கள் சங்கத்தினரும் பயணிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






