அண்ணா பல்கலைக்கழக வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டி.எஸ்.பி. விலகல்


அண்ணா பல்கலைக்கழக வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டி.எஸ்.பி. விலகல்
x

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டி.எஸ்.பி. விலகி உள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. இந்த குழுவின் பரிந்துரை பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடராக சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதே சமயம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கினை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டி.எஸ்.பி. ராகவேந்திரா ரவி விலகி உள்ளார். குழு அதிகாரிகள் தனது பணியை சரிவர செய்யவிடாமல் தடுப்பதாகவும், இதன் காரணமாக விசாரணைக் குழுவில் இருந்து தான் விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டி.எஸ்.பி. ரவியின் இந்த முடிவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story