சென்னையில் தாறுமாறாக சென்று விபத்தை ஏற்படுத்திய கார் - 5 பேர் படுகாயம்


சென்னையில் தாறுமாறாக சென்று விபத்தை ஏற்படுத்திய கார் - 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Oct 2024 12:00 PM GMT (Updated: 19 Oct 2024 12:29 PM GMT)

சென்னையில் தாறுமாறாக சென்ற கார், பிற வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

சென்னை,

சென்னை பூந்தமல்லி சாலையில், கீழ்ப்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த கார் திடீரென தாறுமாறாக ஓடி, சாலையின் முன்னால் சென்றுகொண்டிருந்த ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு குழந்தை, ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய காரை மடக்கி பிடிக்க வாகன ஓட்டிகள் சிலர் முயற்சி செய்தனர். இதனால் அந்த கார் வேகமெடுத்து சென்றதில் மேலும் சில வாகனங்கள் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த இருவர், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.

அதற்குள் வாகன ஓட்டிகள், இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, அங்கு நின்றுகொண்டிருந்த போக்குவரத்து போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர். வேப்பேரி போக்குவரத்து போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர். அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? போதைப்பொருள் ஏதும் பயன்படுத்தியுள்ளார்களா என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சாலையில் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய காரால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணபட்டது.


Next Story