த.வெ.க மாநாட்டுக்கு சென்ற 2 பேர் விபத்தில் உயிரிழப்பு


த.வெ.க மாநாட்டுக்கு சென்ற 2 பேர் விபத்தில் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

த.வெ.க மாநாட்டுக்கு சென்ற 2 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார்.

கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் இருந்து த.வெ.க. மாநாட்டிற்கு சென்ற தொண்டர்கள் விபத்தில் சிக்கினர். திருச்சியில் இருந்து மாநாட்டிற்கு வந்த கார் சாலையில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் சாலைக்கு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story