ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அந்த வகையில், நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முத்தப்பா மற்றும் பெங்களூர் சார்ஜாப்பூர் பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் சின்னப்பா ஆகியோர் குடும்பத்தினருடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்கள் ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி காவிரி ஆற்றுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, முத்தப்பா மகள் பாக்கியலட்சுமி(10), சின்னப்பா மகள் காவியா (16) ஆகிய இருவரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இருவருக்கும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆற்றில் மூழ்கிய சிறுமிகளை தேடியுள்ளனர். ஆனால், சிறுமிகள் கிடைக்காததால் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒகேனக்கல் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், ஆற்றில் மூழ்கிய சிறுமிகளை நீண்ட நேர தேடலுக்குப் பிறகு சடலமாக மீட்டனர்.
தொடர்ந்து, சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






