வார விடுமுறை, பவுர்ணமி: தமிழகம் முழுவதும் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கம்


வார விடுமுறை, பவுர்ணமி: தமிழகம் முழுவதும் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 17 July 2024 10:06 PM GMT (Updated: 18 July 2024 7:44 AM GMT)

வார விடுமுறை, பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை (வெள்ளிக்கிழமை), 20-ந் தேதி (சனிக்கிழமை மற்றும் பவுர்ணமி), 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 260 பஸ்களும், 20-ந் தேதி 585 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 45 பஸ்களும், 20-ந் தேதி 45 பஸ்களும் மேற்கூறிய இடங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 50 ஏ.சி. பஸ்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 15 பஸ்களும், 20-ந் தேதி (சனிக்கிழமை) பவுர்ணமியை முன்னிட்டு அன்று 15 பஸ்களும் என 30 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பவுர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பஸ்கள் 20-ந் தேதி (சனிக்கிழமை) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த வார இறுதியில் நாளை 7 ஆயிரத்து 613 பயணிகளும், நாளை மறுநாள் 4 ஆயிரத்து 354 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 8 ஆயிரத்து 142 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி (ஆப்) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story