விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நிறைவடைந்தது வாக்குப்பதிவு


தினத்தந்தி 10 July 2024 1:33 AM GMT (Updated: 10 July 2024 1:51 PM GMT)

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் நிற்கிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 44 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று அவர்கள் பணிபுரிய உள்ள இடங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்தார்.

மதியம் 2 மணிக்கு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து, வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்ட வேன்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். அப்போது வாக்குச்சாவடிக்கு தேவையான 66 பொருட்கள் அடங்கிய பையையும் உடன் எடுத்து சென்றார்கள்.

இந்த வாகனங்களில் ஏற்கனவே ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அந்த கருவியின் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக வாக்குச்சாவடிகளுக்கு சென்றடைந்ததா? என்பதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர்.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர 110 வாக்குச்சாவடிகளில் வெளிப்பகுதியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். முதல் நபராக சென்று ஜனநாயகக் கடமை ஆற்றினார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நேமூரில் உள்ள வாக்குச்சாவடியில் பெண்கள் மட்டும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி திஷா மித்தல் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படும். அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் மொத்தம் 13 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Live Updates

  • 10 July 2024 12:31 PM GMT

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவடைந்தது.

  • 10 July 2024 12:02 PM GMT

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

  • மணக்கோலத்தில் வாக்களித்த புதுமணத் தம்பதி
    10 July 2024 11:35 AM GMT

    மணக்கோலத்தில் வாக்களித்த புதுமணத் தம்பதி

    கப்பியம்புலியூரைச் சேர்ந்த அஜித்-சந்தியாவுக்கு திருவண்ணாமலையில் இன்று திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி மாலையும், கழுத்துமாக மணக்கோலத்திலேயே விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியம்புலியூர் அரசு பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வருகை தந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

  • 10 July 2024 10:31 AM GMT

    3 மணி நிலவரப்படி 1.5 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.  இவர்களில், பெண்கள் அதிக அளவாக 78,949 பேர் வாக்கு பதிவு செய்துள்ளனர். ஆண்கள் 73,781 பேர் வாக்கு பதிவு செய்திருக்கின்றனர். 276 வாக்கு சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்கு பதிவானது நடைபெற்று வருகிறது.

  • 10 July 2024 10:08 AM GMT

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

  • 10 July 2024 8:08 AM GMT

    விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 10 July 2024 7:46 AM GMT

    விக்கிரவாண்டியில் உள்ள  276 வாக்குச்சாவடிகளிலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

  • வாக்குச்சாவடிகளில் வீல் சேர் வசதி இல்லை என பொதுமக்கள் புகார்
    10 July 2024 7:29 AM GMT

    வாக்குச்சாவடிகளில் வீல் சேர் வசதி இல்லை என பொதுமக்கள் புகார்

    தும்பூர், கெடார், நேமூர் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வீல் சேர் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். வீல் சேர் இல்லாததால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

  • வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து
    10 July 2024 6:37 AM GMT

    வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து

    கொசப்பாளையம் வாக்கு பதிவு மையத்தில் வாக்களிப்பதற்காக காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணிற்கு கத்திக்குத்து விழுந்தது. கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற பெண்ணின் முன்னாள் கணவர் ஏழுமலையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஏழுமலை ஏற்கனவே இரட்டை கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை கத்தியால் குத்தியதாக ஏழுமலை போலீசாரிடம் கூறியுள்ளார். இது குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 10 July 2024 6:06 AM GMT

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 30 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story