விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்


DMK Candidate Anniyur Siva
x
தினத்தந்தி 19 Jun 2024 6:31 AM GMT (Updated: 19 Jun 2024 11:37 AM GMT)

தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70) உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து, அதே மாதம் 8-ந் தேதி, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல்கமிஷன் அறிவித்தது.

பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும்.அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சூட்டோடு சூடாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இடைத்தேர்தலையொட்டி கடந்த 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வரும் 21-ந் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த இடைத்தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலை போலவே 4 முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதாவது தி.மு.க., அ.தி. மு.க., பா.ஜனதா தலைமையில் தலா ஒரு அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடும் என்று கூறப்பட்டது. தி.மு.க. கூட்டணி சார்பில், அக்கட்சி வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார்.

பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. அறிவித்துள்ள நிலையில், அங்கு மும்முனை போட்டி நிலவுவது உறுதியாகி உள்ளது. தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. செயலாளர்கள் உடன் இருந்தனர். கடந்த 14ம் தேதி முதல் தற்போது வரை 7 பேர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story