தமிழ்நாடு வரலாற்றில் புதிய சாதனை படைத்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அமைச்சரவை


தமிழ்நாடு வரலாற்றில் புதிய சாதனை படைத்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அமைச்சரவை
x
தினத்தந்தி 30 Sept 2024 5:35 AM (Updated: 30 Sept 2024 5:39 AM)
t-max-icont-min-icon

தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை,

தமிழக அமைச்சரவை 5-வது முறையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், நாசர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். கவர்னர் ஆர்.என்.ரவி 4 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

செந்தில்பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன் - சுற்றுலாத்துறை, ஆவடி நாசர் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர முதல்-அமைச்சரின் பரிந்துரையின்படி, அமைச்சர்கள் பொன்முடி வனத்துறை அமைச்சராகவும், தங்கம் தென்னரசு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராகவும், ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராகவும், மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், டாக்டர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், கயல்விழி செல்வராஜ் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராகவும் மாற்றம் செய்யப்பட்டு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 4 பட்டியலின அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை என்ற பெருமையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தற்போதைய அமைச்சரவை பெற்றுள்ளது. கோவி செழியன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், சி.வி.கணேசன் ஆகிய 4 பட்டியலின அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது உள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சராகும் முதல் பட்டியலினத்தவர் என்ற பெருமையை கோவி செழியன் பெற்றுள்ளார்.


Next Story